திங்கள், 10 ஆகஸ்ட், 2009

விஞ்ஞானம் - மெஞ்ஞானம் !

மாறுவது விஞ்ஞானம், மாறாதது மெஞ்ஞானம்.விஞ்ஞானம் என்பது சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்
எனும் ஐம்புலன்களுக்குள் எட்டக்கூடிய விஷயங்களைப் பற்றியது.இந்தப் புலன்களுக்கு ஆதாரமான
ஐந்து பூதங்களாகிய மண்,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவைகளில் அடங்கிக் கிடக்கும் சக்திகளைக்
கண்டறிந்து அவைகளை நம் சாமார்த்தியத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வது.இதில் எவ்வளவு
வியக்கத்தகு கருவிகளைக் கண்டு பிடித்தாலும்,விஞ்ஞான வித்தைகளைச் செய்தாலும் அவை அனைத்தும்
பஞ்சபூத சக்திக்குள் அடங்கியதாகவே இருக்கும்.விஞ்ஞான சக்திகளின் வெளித்தோற்றம் சாசுவதமானதல்ல.
கண்டுபிடிப்பிற் கேற்ப மாறுதலடைவதே ஆகும்.

இந்த பஞ்சபூதங்களும்,சூரிய சந்திரன் களும் கூட ஒரு நாளில் அழியக்கூடியவையே. சூரியன் ஒளி
மங்கி வருகிறது,வெப்பம் குறைந்து வருகிறது என்று ஆராய்ந்து சொல்கின்றனர்.அப்படி இவையெல்லாம்
அழிந்தபின் என்ன இருக்கும்? என்ற கேள்விக்கு பதில் காண முயலுவதுதான் மெய்ஞான ஆராய்ச்சி.
இந்த மேலான அறிவை நாடுவதுதான் மெய்ஞானம்.அது உண்மையான அறிவு,உண்மையைப் பற்றிய
அறிவு.

காலங்களைக் கடந்து நிலையாக நிற்பது எது?அழிவில்லாதது,நிரந்தரமானது ,எல்லை இல்லாதது,
எவ்வடிவும் இல்லாதது,எந்த அளவைக்கும் அடங்காதது எது ?அதுதான் உண்மை,இயற்கை
இறைசக்தி என்பதாகும்.இதன் மூல விக்ரகம் மெய்ஞானம்.உற்சவ விக்ரகம் விஞ்ஞானமாகும்.
மூலம் ஒரே விதமாக இருக்கும். உற்சவ விக்ரகத்தின் அலங்காரம் அடிக்கடி மாறும்.இதுதான்
விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் உள்ள வேறுபாடு.

அறிவியலை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.உடலின் சுகபோகத்துக்கு அறிவியல் சக்தி அதிகம்
பயன்படுவதே காரணமாகும். விஞ்ஞான சக்தியினை வெவ்வேறு விதங்களில் அறிந்து வருகிறாம்.
புராணக் கதைகளில் இவை வரங்களால் கிடைத்த சக்தியென வர்ணிக்கப் படுகிறது.
அப்படிப் பட்ட விஞ்ஞான சக்திகளை அதிகம் அடைந்து,அவற்றை தீய வழியிலேயே பிரயோகம்
செய்தவர்கள்தான் அரக்கர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பிற்காலக் கதைகளில்
இவை இயற்கையின் தத்துவங்களாக விவாதிகப் பட்டுள்ளது.தற்காலத்தில் அது சயன்ஸ் என்ற
பெயரில் அது சாஸ்திரமாக விளங்குகிறது.

விஞ்ஞானத்தை அனுபவிப்போம் ! மெய்ஞானத்தை அறிய முயல்வோம். !

சனி, 1 ஆகஸ்ட், 2009

தூக்கம் பயிருக்குத் தண்ணீர்!


ஒருவருடைய சுகம், துக்கம், உடல் நலம், பலம், பலவீனம் எல்லாமே
தூக்கப் பழக்க வழக்கங்கள்தான் தீர்மானிக்கின்றன.
மனதுக்கும் உணர்வுகளுக்கும் தொடர்பு அறுந்து போகும்போது தான்
தூக்கம் வருகிறது.நாள் முழுதும் உழைத்து மூளை களைப்படையும்
போது நம் கண்கள் பார்ப்பது மனதில் பதிவதில்லை. நம் காதுகள்
கேட்பது மூளைக்குப் போவதில்லை.
நாள் முழுக்க தன் ஞாபக சக்தியில் சேகரித்த செய்திகளை செரிக்க
மூளைக்கு ஓய்வு தேவை.. தூங்கினால் மட்டுமே அது செரிமானமாகி
தேவையான இடங்களில் சேகரிக்கப்படும். இல்லாவிட்டால் மூளைக்கு
செரிமானக் கோளாறு வந்து அவதியாகிவிடும்.
நேரத்தில் தூங்கி நேரமே எழுதல் நல்லது. சாதாரணமாக எட்டு மணி நேரம்
தூக்கம் தேவை. இது வயதைப் பொறுத்தும் இருக்கிறது. குழந்தைகள் அதிகம்
தூங்குவதும் முதியோர்கள் குறைவாகத் தூங்குவதும் தவிர்க்க இயலாத
ஒன்றாகும். முதியோர் தூக்கம் உடல் நலத்தைப் பொறுத்தும் உள்ளது.
தூங்கி எழுந்தவுடன் எந்தக் கலக்கமும் இன்றி தெளிவாக வழக்கமான
பணிகள் செய்யமுடிந்தால் அந்த நேரமே கூட போதுமான தூக்கமாக இருக்கும்.
இது அவரவர் உடல் மனநிலை பொறுத்து அமைகிறது.
பூமியின் காந்த மண்டலம் உள்ள வடக்கு திசையில் தலை வைத்துப் படுத்தால்
உடலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் எரிச்சலும் குழப்பமும் மிஞ்சும் எனப்படுகிறது.
தற்போதைய வீடுகளின் அமைப்பில் திசைக்கு முக்கியத்துவம் தருவதில்
பிரச்சனைகள் வரலாம். தலையைக் கீழே வைத்தவுடன் எங்கு தூக்கம்
நன்றாக வருகிறதோ அதுவே சிறந்த இடம்.
தூங்கினால் குழப்பம் தீரும். தூங்குவதையே குழப்பமாக்க வேண்டாம்.

சனி, 9 மே, 2009

ஒருவன் அவனே !




இறைவன் என்பவன் ஒருவன்- அவன்
இருப்பது பலப்பல வடிவம்
எல்லா பொருளும் ஒன்றே
எங்கும் எதிலும் அவனே
நிலமும் நீரும் நெருப்பும்
நீள் விசும்பும் வளியும் அவனே
நிலவு ரவி விண்மீனும்
நிரம்பும் அண்டஙகள் அனைத்தும்
காட்சிகள் பலவாய் இருந்தும்
கடவுள் ஒருவன் அவனே ! !

திங்கள், 4 மே, 2009

தவம் !

எல்லாம் வல்ல இறைவனே ! உன்னை நான் பெறுவதற்கு தவமே வடிவெடுத்தவன்ஆவேனாகுக !


பழைய இரும்பைப் புதியதாக்கலாம். இரும்பின் வடிவத்தையும் வேண்டியவாறு
மாற்றி விடலாம், உலையில் இட்டு உருக்குதல் ஒன்றே அதற்கெல்லாம் உற்ற
உபாயம். மனிதன் தன்னைப் புதிப்பிக்கவும் தன் இயல்பை மாற்றவும் முடியும்.
பேருணர்ச்சி உள்ளத்தில் பொங்கி எழுந்து கொண்டிருந்தால் அது தவமாகிறது.
அவ்வுணர்ச்சி யிலிருந்துதான் எண்ணிய நிலையைப் பெறுதல் எளிதாகிறது.

சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் தவம் செய்பவர் துன்பத்தால் வருந்த
வருந்த மெய்யுணர்வு பெருகும்.சுயநலம்,அகந்தை,ஆணவம் நீங்கப்பெற்ற
தவசீலரை உலகில் மற்ற உயிர்கள் எல்லாம் வணங்கும்.

விரும்பியதை விரும்பியபடி அடையச் செய்வது தவம்.இதனை இப்பிறவியிலேயேசெய்வோம்.

தவம் இருப்போம் ! தழையும் உயிர்க்குத் தளம் அமைப்போம் ! !

அம்மையப்பர் !




ஓரறிவு உடைய புல் பூண்டு முதல் ஆறறிவு படைத்த மனிதன் ஈறாக உள்ள
எல்லா உயிரினங்களும் ஆணும் பெண்ணுமாய் இருந்து தத்தம் மரபை
பேணிவருவதைக் காண்கிறோம்.பண்டைத் தமிழர் நுண்னுணர்வு மிக்கவர்
ஆகையால் இவ்வுலக உண்மையைக் கூர்ந்து கவனித்து பருமையில் உள்ள
எதுவும் நுண்மையில் அடங்கி இருக்கும் எனும் உண்மையை உணர்ந்து
இவ்வுயிரனங் களுக்கெல்லாம் முதலாகிய இறைவனுடைய பண்பிலேயே
இந்த ஆண்மை பெண்மைக் கூறுகள் கலந்திருக்க வேண்டும் என்று ஊகித்தனர்.

அவர்கள் தீயில் இறைவனுடைய ஆற்றல் மிகுதியாக விளங்குதலை உணர்ந்து
எரி அமைத்து வழிபாடு செய்து வந்தபோது தீயிலும் இருவேறு பண்புகள்
நிலவுவதைக் கண்டு தம் ஊகத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். [ மின்சாரம்,
அணுவிலும் இருவேறு கூறுகளின் செயல் உள்ளது ]

நெருப்பை மேம்போக்காகப் பார்த்தால் அது செந்நிறமாகக் காணப்படுகிறது.
அதனை நன்கு கவனித்தால் அச்செந்நிறத்துள் அடங்கிய ஒருசிறு பகுதி நீலநிறமாக
விளங்குவதைக் காணலாம். காரணம் நெருப்பில் நீரும் கலந்திருப்பதே.
[ இன்றைய அறிவியல் இதை உறுதிப் படுத்துகிறது. ]

நீலநிறமும் குளிர்ச்சியும் நீரின் பண்புகள்.செந்நிறமும் சூடும் நெருப்பின் பண்புகள்.
நீரில்லாத உலக வாழ்க்கையோ நெருப்பில்லாத உலக வாழ்க்கையோ நம்மால்
எண்ணிப் பார்க்கமுடியாது. வன்மையும் சூடும் செம்மையுமுடைய நெருப்பு
ஆண் கூறாகவும் மென்மையும் குளிர்ச்சியும் நீலமும் உடைய நீர் தண்மைமிக்க
பெண் கூறாகவும் கருதப்படுகின்றன.
ஆகவே பண்டைய மக்கள் இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் அம்மையாகவும் அப்பனாகவும் அமைத்து வழிபட்டனர்.
அம்மை அப்பனை வணங்கலாம்! அகிலத்தைக் கட்டி ஆளலாம்! !

ஞாயிறு, 3 மே, 2009

அஹம்பிரம்மாஸ்மி !


ஒரே நேரத்தில் எல்லாவறிலும் ஒற்றுமையும் வேற்றுமையும் இருக்கின்றன.
கடலிலிருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டுத் தண்ணீரில் க்டலின் தன்மை
இருந்தாலும் கடலிலிருந்து வேறுபட்டு இருக்கிறது தீவுகள் ,தட்பவெப்பம்
நிறம், அளவு, இப்படிப் பற்பல உலகங்க்கள் கடலில் இருக்கின்றன.
அவை அந்த துளியில் இல்லை.

அதுபோல்தான் கடவுளின் பிம்பமாக, அதன் துளியாக நாம் இருபதால்
அவரது சாயல் நமக்கு இருக்கிறதே தவிர, அவராக நாம் இல்லை.
' அஹம்பிரம்மாஸ்மி ' என்பதன் பொருள் ,நாம் கடவுள் என்று அர்த்தமல்ல.
நம்மிடம் க்டவுள் தன்மை இருக்கிறது என்பதுதான் சரியான பொருளாகும்.

அதுபோல ஆண்டவனின் முழுமையான சொரூபத்தை 'பரப்பிரும்மம்'
என்று அழைக்கிறோம். அவருடைய ஒரு சிறிய துளியான நம்மை பிரம்மன்
என்கிறோம்.அதனால்தான் நாம் 'அஹம்பிரம்மாஸ்மி' ஆனால் பரப்பிரும்மம்
இல்லை. ப்ரம்மத்திலிருக்கும் தன்மை பரப்பிரம்மத்திலிருந்து வ்ந்ததுதான்.
இருப்பினும் அதுவும் இதுவும் பல விதத்தில் மாறுபட்டு இருக்கிறது.
இதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம். ! !

க்டவுள் நாமல்ல ! கடவுளை நினைத்து காரியத்தைச் செய்வோம் !!

சனி, 2 மே, 2009

வேகம் !




தேங்கிய தெளிநீரில் அடிப்பரப்பு பளிங்குபோல் தென்படுகிறது.
வேகம் தணிந்து ஓய்ந்த மனதில் ஒளிமிக்க இறைவா நீ
அங்கு நன்றாக ஒளிர்ந்து மிளிர்கின்றாய் !
-- -- -- -- --

சூறாவளி வீசுகிறது சுற்றுப்புற செடிகொடிகளை நிலைகுலையச் செய்து
விடுகிறது. அவைகள் காயப் பட்டவை போன்று ஆகிவிடுகின்றன.
பின்பு அமைதி நிலவும்போது அவை யாவும் சிகிச்சை பெறும் சாந்தத்தில்
இருக்கின்றன. பறந்த மண்ணும் வீசிய தூசியும் அடங்கி அமைதியுண்டாகிறது.

அதுபோல மனக் கொந்தளிப்பு அடங்கியபின் தனது மகத்தான தன்மையில்
நிலைத்திருக்கும் பாங்கு அதற்கு வருகிறது. பொருள்களின் தாரதம்மியம்
மனதுக்கு அப்போது விளங்குகிறது. நல்லறிவை வளர்ப்பதற்கு அதுவே
தருணமாகும்.சாந்தி நிலவும் போது சஞ்சலம் இருப்பதில்லை.
மனதில் அமைதி இருந்தால் வாக்கினில் இனிமை இருக்கும்.

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க ! !

வெள்ளி, 1 மே, 2009

அஹிம்சை !


ஹிம்சை என்றால் துன்புறுத்தல் .அஹிம்சை என்றால் தொந்தரவு
செய்யாது இருத்தல். பிறருக்குக் கேடு செய்பவன் தனக்கே அது
வரும்போதுதான் உண்மை அவனுக்குப் புரிகிறது. இறைவன்
படைப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றாகும். உயிர்களுக்கிடையே
உள்ள அடிப்படை ஒற்றுமையை அறியாதவன் மட்டுமே பிற
உயிர்களுக்குத் தீங்கு செய்கிறான். ஒரு கை மற்றொரு கையைத்
தண்டித்தால் அது தனக்கே கேடாய் முடியும். ஒரு ஜீவன்
மற்றொரு ஜீவனை ஹிம்சிக்கும் போது கடசியில் அவன்
தன்னைத்தானே ஹிம்சித்துக் கொண்டவனாகிறான்.
பிற உயிர்களைக் கொல்லாதிருத்தலே அறமாகும். மன்னுயிரைத்
தன்னுயிர் போல் காக்கும் மாண்பு ம்னிதருக்கு வேண்டும்.
இருப்பதைப் பகிர்ந்து தானும் உண்டு பிற உயிர்களையும்
வாழ வைப்பவன் தரணியில் மாபெரும் தர்மவானாகிறான்.
உயிர்களில் உறைவது இறைவன். உன்னுள் இருப்பதும் அவனே.

உழைப்பு !




ஓயாது உழைக்கும் ஓங்காரப் பொருளே. என் வாழ்வும்
மேம்பட்டு இருக்க உழைப்பே வடிவெடுத்திருப்பேனாக !

அண்டங்கள் அனைத்தையும் இயக்குதலில் இறைவனுக்கு
ஓய்வு என்பதில்லை. அவனது பேருழைப்பால் புவனம்
புனிதத்தைப் பெற்று வருகிறது. நம்மை இயக்கும் இறைவனை
நாம் உணரவேண்டும்.
உணவைக் கையால் எடுத்து வாயில் போட்டு பல்லால்
அரைத்து விழுங்குகிறோம். நம் பணி அதுவரைதான்
அரைத்த உணவு கூழாகி பல் வேறு சத்துக்களாகப்
பிரிந்து உடலில் தேவைப்பட்ட இடங்களுக்கு
இரத்தமாகி விநியோகித்து நம்மைப் பராமரிக்கச்செய்வது யார்?
கால அவகாசம் எடுத்தாலோ வாராந்திர விடுமுறை
விட்டாலோ என்னவாகும்?
பிறந்ததிலிருந்து துடிக்கத்துவங்கிய இதயம் இன்னும்
தன் கடமையை சிறிதும் தவறாது செய்து வருகிறது.
நம் உத்தரவு ஏதுமின்றி ஜீரணமாவதும் இதயம் துடிப்பதும்
நல்ல வேளை இறைவன் எடுத்துக் கொண்டதால் நாம்
இன்னும் பிழைத்திருக்கிறோம்
முறையுடன் உழைப்பவர் இறைவணக்கம் செய்கின்றனர்
முன்னேற்றமடைகின்றனர். உழைக்கக் கற்றவன்
வாழக் கற்றவன் ஆகின்றான்.
இன்று உறுதி எடுப்போம்! என்றும் உழைப்போம் நன்றே உயர்வோம் ! !

வியாழன், 30 ஏப்ரல், 2009

கப்பலின் வரிசை கண்கொள்ளாக் காட்சி ! !



பாய்மரக் கப்பலின் அணிவகுப்பு

பார்க்க வருவோர்க்கு பெரும் வியப்பு

மாய வித்தையென ஜொலி ஜொலிப்பு

மயக்கும் வண்ணங்களில் ஒளியமைப்பு !

அறம் !

அறம் என்பது தருமம் . அறம் சிறப்பையும் செல்வத்தையும் கொடுக்கும் .
அறம் பலவகைப்பட்டது. வாழ்க்கைக்குத் தகுந்த செயல் எது என்று
வரையறுக்கப்பட்டது அறம். அவரவர் நிலைக்கு ஏற்றவாறு அது அமையும்.
பொம்மைகளை வைத்து விளையாடுவது குழ்ந்தைகளின் அறம். முதியோர்க்கு
அது அறமாகாது. பொதுவாக பொறாமை, ஆசை, கோபம், க்டுஞ்ச்சொல்
இவைகளை நீக்கி நாம் செய்கின்ற செயல்கள் அறச்செயலாகும் . அறம்
செய்வதைவிட மேம்பட்ட செயல் இல்லை.
தகாத வழியில் சம்பாதித்து தான் என்ற அகந்தையுடன் தர்மத்துக்கு மாறான
செயல் புரியவா இந்த மனித ஜன்மம் எடுத்தோம்? சரியா தவறா தங்களது
மனதைக் கேட்டுச்செயயுங்கள்.

மாசில்லா மனம் கள்ளம் காட்டாது . மனதோடு உதவுங்கள் மகிழ்வோடு
வாழுங்கள் ! !

புதன், 29 ஏப்ரல், 2009

அன்பு !

அன்பாகிய திருவருளும் இன்பமாகிய சிவனும் மணியும் ஒளியும் போல்
ஒன்றேயாகும் . அன்பு சிவனின் திருமேனி . எனவே அன்பே சிவமாகும்
இறைவனிடம் அன்பு செலுத்துவோம் . இருக்கும் வாழ்வை இனிமையாக்குவோம் .அன்பால் சாதிக்கமுடியாது அகிலத்தில் ஏதுமில்லை .
புதியவரைக் கண்டால் ஒரு புன்னகை.புரிந்தவர் வந்தால் ஒரு விசாரிப்பு .
நல்ல உள்ளத்தோடு நலம் பாராட்டுங்கள் . நாமும் வாழ்வோம் மற்றவரையும்
வாழ வைப்போம் என்ற எண்ணம் என்றும் மனதில் அடிநாதமாக ஒலிக்கட்டும்
பரிட்சித்து பாருங்கள் உங்களுக்குள் மாற்றம் தெரிவது நிச்சயம் .
மனதில் அன்பு ஊறட்டும் . வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும் .

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

வியாழன், 23 ஏப்ரல், 2009

பழநிமுருகன்!


பழநி முருகனைப் பாடிவருவோம்!
பல் உயிரும் வாழவே வேண்டி நிற்போம்!
அழகன் குமரனையே தேடிவருவோம்!
அடைக்கலப் பொருளாக நாம் இருப்போம்!
கழலின் தண்டையொலி கேட்டுவருவோம்!
கடம்பனை கந்தனைக் கண்டுமகிழ்வோம்!
குழகன் திருவடியே சரணம் செய்வோம்!
குன்றெல்லாம் அவனையே கொண்டாடுவோம் ! !

காத்திடுவாள் கரியகாளி !

கரியகாளி அன்னையே
காத்திடுவாய் என்னையே
அரியசக்தி நின்னையே
அடிபணிந்தேன் என்றுமே
இனியதான இறைவியே
இணையில்லாத தலைவியே
கனியதான வாழ்வெனக்கு
கருணை செய்வாய் என்றுமே
மகிமையான மாரியே
மகவு காக்கும் சூலியே
அகில முழுதும் தழைக்கவே
அருள் புரிவாய் என்றுமே ! !

வினாயகா போற்றி !


முழுமுதற் கடவுளே போற்றி!
மூஷிக வாகனா போற்றி!
எழுகின்ற ஞாயிறே போற்றி!
எளிமையின் உருவே போற்றி!
விழுமிய வினாயகா போற்றி!
விக்கினங்கள் தீர்ப்பாய் போற்றி!
ஒழுக்கத்தின் உயர்வே போற்றி!
ஓங்காரப் பொருளே போற்றி போற்றி !

சனி, 21 மார்ச், 2009

முதல் பார்வை

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

தமிழன் பார்வைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
தமிழனின் உலகளாவிய பார்வை இனி வரும் பக்கங்களில் காண்போம்.