சனி, 9 மே, 2009

ஒருவன் அவனே !




இறைவன் என்பவன் ஒருவன்- அவன்
இருப்பது பலப்பல வடிவம்
எல்லா பொருளும் ஒன்றே
எங்கும் எதிலும் அவனே
நிலமும் நீரும் நெருப்பும்
நீள் விசும்பும் வளியும் அவனே
நிலவு ரவி விண்மீனும்
நிரம்பும் அண்டஙகள் அனைத்தும்
காட்சிகள் பலவாய் இருந்தும்
கடவுள் ஒருவன் அவனே ! !

திங்கள், 4 மே, 2009

தவம் !

எல்லாம் வல்ல இறைவனே ! உன்னை நான் பெறுவதற்கு தவமே வடிவெடுத்தவன்ஆவேனாகுக !


பழைய இரும்பைப் புதியதாக்கலாம். இரும்பின் வடிவத்தையும் வேண்டியவாறு
மாற்றி விடலாம், உலையில் இட்டு உருக்குதல் ஒன்றே அதற்கெல்லாம் உற்ற
உபாயம். மனிதன் தன்னைப் புதிப்பிக்கவும் தன் இயல்பை மாற்றவும் முடியும்.
பேருணர்ச்சி உள்ளத்தில் பொங்கி எழுந்து கொண்டிருந்தால் அது தவமாகிறது.
அவ்வுணர்ச்சி யிலிருந்துதான் எண்ணிய நிலையைப் பெறுதல் எளிதாகிறது.

சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் தவம் செய்பவர் துன்பத்தால் வருந்த
வருந்த மெய்யுணர்வு பெருகும்.சுயநலம்,அகந்தை,ஆணவம் நீங்கப்பெற்ற
தவசீலரை உலகில் மற்ற உயிர்கள் எல்லாம் வணங்கும்.

விரும்பியதை விரும்பியபடி அடையச் செய்வது தவம்.இதனை இப்பிறவியிலேயேசெய்வோம்.

தவம் இருப்போம் ! தழையும் உயிர்க்குத் தளம் அமைப்போம் ! !

அம்மையப்பர் !




ஓரறிவு உடைய புல் பூண்டு முதல் ஆறறிவு படைத்த மனிதன் ஈறாக உள்ள
எல்லா உயிரினங்களும் ஆணும் பெண்ணுமாய் இருந்து தத்தம் மரபை
பேணிவருவதைக் காண்கிறோம்.பண்டைத் தமிழர் நுண்னுணர்வு மிக்கவர்
ஆகையால் இவ்வுலக உண்மையைக் கூர்ந்து கவனித்து பருமையில் உள்ள
எதுவும் நுண்மையில் அடங்கி இருக்கும் எனும் உண்மையை உணர்ந்து
இவ்வுயிரனங் களுக்கெல்லாம் முதலாகிய இறைவனுடைய பண்பிலேயே
இந்த ஆண்மை பெண்மைக் கூறுகள் கலந்திருக்க வேண்டும் என்று ஊகித்தனர்.

அவர்கள் தீயில் இறைவனுடைய ஆற்றல் மிகுதியாக விளங்குதலை உணர்ந்து
எரி அமைத்து வழிபாடு செய்து வந்தபோது தீயிலும் இருவேறு பண்புகள்
நிலவுவதைக் கண்டு தம் ஊகத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். [ மின்சாரம்,
அணுவிலும் இருவேறு கூறுகளின் செயல் உள்ளது ]

நெருப்பை மேம்போக்காகப் பார்த்தால் அது செந்நிறமாகக் காணப்படுகிறது.
அதனை நன்கு கவனித்தால் அச்செந்நிறத்துள் அடங்கிய ஒருசிறு பகுதி நீலநிறமாக
விளங்குவதைக் காணலாம். காரணம் நெருப்பில் நீரும் கலந்திருப்பதே.
[ இன்றைய அறிவியல் இதை உறுதிப் படுத்துகிறது. ]

நீலநிறமும் குளிர்ச்சியும் நீரின் பண்புகள்.செந்நிறமும் சூடும் நெருப்பின் பண்புகள்.
நீரில்லாத உலக வாழ்க்கையோ நெருப்பில்லாத உலக வாழ்க்கையோ நம்மால்
எண்ணிப் பார்க்கமுடியாது. வன்மையும் சூடும் செம்மையுமுடைய நெருப்பு
ஆண் கூறாகவும் மென்மையும் குளிர்ச்சியும் நீலமும் உடைய நீர் தண்மைமிக்க
பெண் கூறாகவும் கருதப்படுகின்றன.
ஆகவே பண்டைய மக்கள் இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் அம்மையாகவும் அப்பனாகவும் அமைத்து வழிபட்டனர்.
அம்மை அப்பனை வணங்கலாம்! அகிலத்தைக் கட்டி ஆளலாம்! !

ஞாயிறு, 3 மே, 2009

அஹம்பிரம்மாஸ்மி !


ஒரே நேரத்தில் எல்லாவறிலும் ஒற்றுமையும் வேற்றுமையும் இருக்கின்றன.
கடலிலிருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டுத் தண்ணீரில் க்டலின் தன்மை
இருந்தாலும் கடலிலிருந்து வேறுபட்டு இருக்கிறது தீவுகள் ,தட்பவெப்பம்
நிறம், அளவு, இப்படிப் பற்பல உலகங்க்கள் கடலில் இருக்கின்றன.
அவை அந்த துளியில் இல்லை.

அதுபோல்தான் கடவுளின் பிம்பமாக, அதன் துளியாக நாம் இருபதால்
அவரது சாயல் நமக்கு இருக்கிறதே தவிர, அவராக நாம் இல்லை.
' அஹம்பிரம்மாஸ்மி ' என்பதன் பொருள் ,நாம் கடவுள் என்று அர்த்தமல்ல.
நம்மிடம் க்டவுள் தன்மை இருக்கிறது என்பதுதான் சரியான பொருளாகும்.

அதுபோல ஆண்டவனின் முழுமையான சொரூபத்தை 'பரப்பிரும்மம்'
என்று அழைக்கிறோம். அவருடைய ஒரு சிறிய துளியான நம்மை பிரம்மன்
என்கிறோம்.அதனால்தான் நாம் 'அஹம்பிரம்மாஸ்மி' ஆனால் பரப்பிரும்மம்
இல்லை. ப்ரம்மத்திலிருக்கும் தன்மை பரப்பிரம்மத்திலிருந்து வ்ந்ததுதான்.
இருப்பினும் அதுவும் இதுவும் பல விதத்தில் மாறுபட்டு இருக்கிறது.
இதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம். ! !

க்டவுள் நாமல்ல ! கடவுளை நினைத்து காரியத்தைச் செய்வோம் !!

சனி, 2 மே, 2009

வேகம் !




தேங்கிய தெளிநீரில் அடிப்பரப்பு பளிங்குபோல் தென்படுகிறது.
வேகம் தணிந்து ஓய்ந்த மனதில் ஒளிமிக்க இறைவா நீ
அங்கு நன்றாக ஒளிர்ந்து மிளிர்கின்றாய் !
-- -- -- -- --

சூறாவளி வீசுகிறது சுற்றுப்புற செடிகொடிகளை நிலைகுலையச் செய்து
விடுகிறது. அவைகள் காயப் பட்டவை போன்று ஆகிவிடுகின்றன.
பின்பு அமைதி நிலவும்போது அவை யாவும் சிகிச்சை பெறும் சாந்தத்தில்
இருக்கின்றன. பறந்த மண்ணும் வீசிய தூசியும் அடங்கி அமைதியுண்டாகிறது.

அதுபோல மனக் கொந்தளிப்பு அடங்கியபின் தனது மகத்தான தன்மையில்
நிலைத்திருக்கும் பாங்கு அதற்கு வருகிறது. பொருள்களின் தாரதம்மியம்
மனதுக்கு அப்போது விளங்குகிறது. நல்லறிவை வளர்ப்பதற்கு அதுவே
தருணமாகும்.சாந்தி நிலவும் போது சஞ்சலம் இருப்பதில்லை.
மனதில் அமைதி இருந்தால் வாக்கினில் இனிமை இருக்கும்.

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க ! !

வெள்ளி, 1 மே, 2009

அஹிம்சை !


ஹிம்சை என்றால் துன்புறுத்தல் .அஹிம்சை என்றால் தொந்தரவு
செய்யாது இருத்தல். பிறருக்குக் கேடு செய்பவன் தனக்கே அது
வரும்போதுதான் உண்மை அவனுக்குப் புரிகிறது. இறைவன்
படைப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றாகும். உயிர்களுக்கிடையே
உள்ள அடிப்படை ஒற்றுமையை அறியாதவன் மட்டுமே பிற
உயிர்களுக்குத் தீங்கு செய்கிறான். ஒரு கை மற்றொரு கையைத்
தண்டித்தால் அது தனக்கே கேடாய் முடியும். ஒரு ஜீவன்
மற்றொரு ஜீவனை ஹிம்சிக்கும் போது கடசியில் அவன்
தன்னைத்தானே ஹிம்சித்துக் கொண்டவனாகிறான்.
பிற உயிர்களைக் கொல்லாதிருத்தலே அறமாகும். மன்னுயிரைத்
தன்னுயிர் போல் காக்கும் மாண்பு ம்னிதருக்கு வேண்டும்.
இருப்பதைப் பகிர்ந்து தானும் உண்டு பிற உயிர்களையும்
வாழ வைப்பவன் தரணியில் மாபெரும் தர்மவானாகிறான்.
உயிர்களில் உறைவது இறைவன். உன்னுள் இருப்பதும் அவனே.

உழைப்பு !




ஓயாது உழைக்கும் ஓங்காரப் பொருளே. என் வாழ்வும்
மேம்பட்டு இருக்க உழைப்பே வடிவெடுத்திருப்பேனாக !

அண்டங்கள் அனைத்தையும் இயக்குதலில் இறைவனுக்கு
ஓய்வு என்பதில்லை. அவனது பேருழைப்பால் புவனம்
புனிதத்தைப் பெற்று வருகிறது. நம்மை இயக்கும் இறைவனை
நாம் உணரவேண்டும்.
உணவைக் கையால் எடுத்து வாயில் போட்டு பல்லால்
அரைத்து விழுங்குகிறோம். நம் பணி அதுவரைதான்
அரைத்த உணவு கூழாகி பல் வேறு சத்துக்களாகப்
பிரிந்து உடலில் தேவைப்பட்ட இடங்களுக்கு
இரத்தமாகி விநியோகித்து நம்மைப் பராமரிக்கச்செய்வது யார்?
கால அவகாசம் எடுத்தாலோ வாராந்திர விடுமுறை
விட்டாலோ என்னவாகும்?
பிறந்ததிலிருந்து துடிக்கத்துவங்கிய இதயம் இன்னும்
தன் கடமையை சிறிதும் தவறாது செய்து வருகிறது.
நம் உத்தரவு ஏதுமின்றி ஜீரணமாவதும் இதயம் துடிப்பதும்
நல்ல வேளை இறைவன் எடுத்துக் கொண்டதால் நாம்
இன்னும் பிழைத்திருக்கிறோம்
முறையுடன் உழைப்பவர் இறைவணக்கம் செய்கின்றனர்
முன்னேற்றமடைகின்றனர். உழைக்கக் கற்றவன்
வாழக் கற்றவன் ஆகின்றான்.
இன்று உறுதி எடுப்போம்! என்றும் உழைப்போம் நன்றே உயர்வோம் ! !